தர்மபுரி, ஜன.6: பாலக்கோடு திம்மனஅள்ளியில் உள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று கலெக்டர் சதீஸ், திடீர் ஆய்வு மேற்கொண்டு, கரும்பு அரவை பணிகளை நேரில் பார்வையிட்டார். கரும்பு ஆலையில், இதுவரை 22,357 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு சராசரி சர்க்கரை கட்டுமானம் 9.32 சதவீதம் எய்தப்பட்டுள்ளது. இந்நாளது சர்க்கரை கட்டுமானம் 10.04 சதவீதம் என்ற அளவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று வரை இணைமின் திட்டத்தின் மூலமாக 2055 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, 1089 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பின்னர், கலெக்டர் கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலையின் தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், நடப்பு ஆண்டு கரும்பு நடவு பருவத்தில் நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டினை அடையவும், தற்போது நடைபெற்று வரும் ஆலை அரவையை எந்த விதத்திலும் இடையில் நிறுத்தாமல் நல்ல முறையில் தொடர்ந்து அரவை மேற்கொள்ள வேண்டும் என ஆலை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் ரவி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
+



