தர்மபுரி, ஜூலை 6: தர்மபுரி மாவட்டம், குட்டூரில் இருந்து ஆவாரங்காட்டூர் செல்லும் சாலையை சீரமைத்து சீரான போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், குட்டூரில் இருந்து ஆவாரங்காட்டூர் வரை 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்கள் விவசாய தொழிலில் பிரதானமாக ஈடுபட்டு வருகின்றனர். மரவள்ளி, சாமந்தி, சோளம், கம்பு போன்ற மகசூல்களை பைக்குகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் தர்மபுரி, நல்லம்பள்ளி உள்ளிட்ட சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.
மேலும், இந்த பகுதியிலிருந்து 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வெங்கட்டம்பட்டி, தம்மணம்பட்டி அரசு பள்ளிகளிலும், தர்மபுரி மற்றும் வெளியூரில் உள்ள கல்லூரிகளிலும் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஆவாரங்காட்டூரில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை குண்டும் -குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க ஜல்லி கொட்டப்பட்டு பல மாதங்களாகியும் தார்சாலை அமைக்கப்படவில்லை. எனவே, குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தார் சாலையாக அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
