நல்லம்பள்ளி, மே 23: பெங்களூருவிலிருந்து திருச்சிக்கு கூல்டிரிங்ஸ் ஏற்றிச் செல்லும் வழியில் தொப்பூர் இரட்டை பாலத்தில் விபத்தில் சிக்கிய டாரஸ் லாரி 100 அடி பள்ளத்தில் விழாமல் தப்பியது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து குளிர்பானம் ஏற்றிய டாரஸ் லாரி ஒன்று, திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது.
திடீரென தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரட்டை பாலத்தின் மீது மோதியது. அப்போது, பாலத்தின் தடுப்பு சுவர் அரணாக தடுத்ததால் 100 அடி பள்ளத்தில் விழாமல் லாரி தப்பித்தது. லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினார். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி பணியாளர்கள் விபத்துக்குள்ளான லாரியை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.


