தர்மபுரி, மே 23: தர்மபுரி மாவட்டத்தில், பொது இடங்களில் குடிபோதையில் ரகளை செய்து பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக ஒரே நாளில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்ட், ஓட்டல்கள் மற்றும் பிரதான சாலைகள் உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில், குடிபோதையில் சிலர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து வருவதாக காவல்நிலையங்களுக்கு புகார்கள் சென்றது. இதனை தொடர்ந்து ரோந்து பணியை தீவிரப்படுத்தி, ‘போதை’ நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, தர்மபுரி டவுன் எஸ்ஐ சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் தர்மபுரி டவுன் பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். பழைய பஸ் நிலையத்தில், தர்மபுரி குப்பாகவுண்டர் தெருவைச் சேர்ந்த கிஷோர் பாலாஜி(20) என்ற வாலிபர், பஸ் ஸ்டாண்டுக்குள் நின்று கொண்டு போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேசிக்கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல், மதிகோண்பாளையம் போலீஸ் எஸ்ஐ கார்த்திகேயன் ரோந்து பணியின் போது, வெள்ளோலை அரசு பள்ளி அருகே,
போதையில் ரகளை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மணி(29), பாலக்கோடு போலீஸ் எஸ்ஐ இளமதி மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது, எண்டப்பட்டி பஸ் நிறுத்தத்தில் இடையூறு ஏற்படுத்தியதாக ஜெயராஜ்(40), மூர்த்தி(48) ஆகியோரை கைது செய்தனர். அதியமான்கோட்டை, ஏரியூர், பொம்மிடி, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, ஒகேனக்கல், இண்டூர், பெரும்பாலை மற்றும் காரிமங்கலம் காவல் நிலையங்களில், நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
