தர்மபுரி, மே 19: தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ், விவசாயிகளின் தரவுகள் பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப்பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் வகையிலும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும், பிஎம் கிசான் திட்டம், பயிர் காப்பீடுத் திட்டம் போன்ற மத்திய -மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம். எனவே, இதுவரை பதிவு செய்யாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தர்மபுரி மாவட்டத்தில் 1,97,542 இலக்கிற்கு இதுவரை 1,52,082 விவசாயிகளின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 45,460 விவசாயிகளின் தரவுகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
எனவே, விடுபட்ட விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண் அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள்(வேளாண் வணிகம்), விதைச் சான்றுத்துறை அலுவலர்கள், வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு வரும் மே 31ம் தேதிக்குள் சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைந்த கைப்பேசி எண்ணை கொண்டு சென்று, இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


