தர்மபுரி, ஜூன் 16: தர்மபுரியில், சந்துக்கடையில் மதுவிற்ற 20 பேரை போலீசார் கைது செய்து, 400 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தர்மபுரியில், பரவலாக சந்துக்கடைகள் மூலம் கள்ளத்தனமாக டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தர்மபுரி எஸ்பி மகேஸ்வரன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும், நேற்று முன்தினம் இரவு, அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி, மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவர்களை அதிரடியாக கைது செய்தனர். தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி, அரூர், மொரப்பூர், பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளிலும், புதர்களிலும் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த 20 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


