தர்மபுரி, ஜூன் 16: தர்மபுரி ரயில் நிலையத்தில், சிங்கப்பெண் அதிரடிபடை போலீசார், பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கு தர்மபுரி ரயில்வே போலீஸ் எஸ்ஐ ரமேஷ் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் எஸ்ஐ சரசு மற்றும் போலீசார் பேசுகையில், `பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுகளின் ‘குட் டச், பேட் டச்’ பற்றியும், பொது இடங்களில் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சமூக ஊடகங்களை (சோசியல் மீடியா) பாதுகாப்பாக கையாளுவது எப்படி, ஆன்லைன் மோசடிகள் மற்றும் மிரட்டல்களிலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து வகுப்புகள் நடத்தப்படுகிறது.
காவலன் எஸ்ஒஎஸ் செயலியை ஆபத்தான சூழ்நிலைகளில் பெண்கள் பயன்படுத்தி போலீசாரின் உதவியைப் பெறலாம் என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கிறோம். 1091 மற்றும் 181 போன்ற எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெண்களைக் கேலி செய்பவர்கள் மற்றும் அத்துமீறுபவர்களைக் கண்காணித்து, உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்கள் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், உடனடியாக காவல்துறையை அணுகும் துணிச்சலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே இந்த சிங்கப்பெண் அதிரடி படையினரின் முதன்மை நோக்கமாகும்,’ என்றனர்.
