தர்மபுரி, மே 12: தர்மபுரி அருகே 2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டத்திற்கு, ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2010ம் ஆண்டு, தமிழக அரசு தர்மபுரி நகராட்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.32 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக 19 வார்டுகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பாதாள சாக்கடை திட்ட கழிவுநீரை ஒருங்கிணைத்து, மதிகோன்பாளையம் மற்றும் காந்திபாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மதிகோன்பாளையம் -அரூர் பிரிவு சாலையில், பாதாள சாக்கடை கழிவுநீர் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினசரி 38 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, வண்டல் படிவம் சேகரித்து வைக்கப்படுகிறது. சுத்திகரிப்பு செய்யும் கழிவுநீர் விவசாய பணிக்கு திருப்பி விடப்படுகிறது.
இந்நிலையில், நகராட்சியில் விடுபட்ட 14 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, தமிழ்நாடு காலநிலை மாற்றியமைக்கும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டத்தின் கீழ், நகராட்சியில் புதியதாக பாதாள சாக்கடை திட்டம்(பகுதி -2) ரூ.82.15 கோடியில் நடந்து வருகிறது. 14 வார்டுகளில் பாதாள சாக்கடை குழாய் மற்றும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
இதுபோக ஏற்கனவே விடுபட்ட 3 வார்டுகளிலும் என மொத்தம் 17 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கிறது. தர்மபுரி- திருப்பத்தூர் சாலை மதிகோண்பாளையம் ரெட்டிராயன் ஏரிக்கரை அருகே, பாதாள சாக்கடை திட்டத்திற்கு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
