பாப்பிரெட்டிப்பட்டி, மே 9: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே நாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(48). இவரது மனைவி சுமதி(46). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், குடும்பத் தகராறில் கணவரை பிரிந்த சுமதி, இரண்டு ஆண்டுக்கு மேலாக ஓமலூர் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். விவசாயியான ராமகிருஷ்ணன், தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். நேற்று மதியம் வழக்கம் போல், தேங்காய் வியாபாரத்திற்காக தனது டூவீலரில் பொம்மிடிக்கு புறப்பட்டார். பாப்பிரெட்டிப்பட்டி வழியாக வெங்கடசமுத்திரம் பஸ் ஸ்டாப் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரி டூவீலர் மீது மோதியது. இதில், வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராமகிருஷ்ணன், சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து
வருகின்றனர்.
