தர்மபுரி, ஆக.5: உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தர்மபுரி மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் 14 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட, மாவட்ட செயலாளர் பழனியப்பன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப் பட்டார். இதனை கண்டித்து தர்மபுரி மாவட்டம் முழுவதும் திமுக மற்றும் இளைஞரணி சார்பில் 14 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. தர்மபுரி நான்கு ரோட்டில் நடந்த மறியல் போராட்டத்திற்கு, திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் அசோக்குமார் தலைமை வகித்தார். இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜகோபால், கலைச்செல்வன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மச்செல்வன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர்கள் நாட்டான் மாது, கௌதம், ஒன்றிய செயலாளர்கள் காவேரி, ஏஎஸ் சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் கேஎஸ்ஆர் சேட்டு, எச்சனஅள்ளி சண்முகம், நகர நிர்வாகிகள் முல்லை வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
+


