நல்லம்பள்ளி, ஜூலை 2: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், வெங்கட்டாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கபிரகாசம்(54). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த 28ம் தேதி இரவு, குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று இருந்தனர். தரிசனத்தை முடித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளனர்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகைகள் திருடு போயிருந்தது. இதுகுறித்து தங்க பிரகாசம் நேற்று அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


