அரூர், ஜூலை 1: கம்பைநல்லூர் வழியாக மொரப்பூர்-காரிமங்கலம் வழித்தடத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்துக்கு உள்பட்ட மொரப்பூர்- காரிமங்கலம் வழித்தடத்தில் எலவடை, நவலை, க.ஈச்சம்பாடி, செங்குட்டை, கம்பைநல்லூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் அரூர்- கிருஷ்ணகிரி வழித்தடத்தில் செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொலைதூர பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் கிராமப் பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிற்பதில்லை. இதனால், கிராமப் பகுதியில் உள்ள மாணவர்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் நாள்தோறும் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர். பள்ளி வேலை நேரங்களில் பேருந்து வசதிகள் இல்லாததால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கின்றனர். இதனால் அரூர், காரிமங்கலம் நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் மொரப்பூரில் இருந்து காரிமங்கலம் வரையில் கூடுதல் அரசு, தனியார் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
