Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கிணற்றில் செத்து மிதக்கும் வளர்ப்பு மீன்கள் மலைவாழ் மக்கள் வேதனை பறிமுதல் செய்த வெல்லத்தை கொட்டியதால்

ஒடுகத்தூர், டிச.28: ஒடுகத்தூர் அருகே மலை கிராமங்களில் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் வெல்லம் கிணற்றில் கொட்டுவதால் வளர்ப்பு மீன்கள் செத்து மிதந்து வருவதாக மலைவாழ் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பலாம்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் விவசாயத்தையே முதன்மை தொழிலாக கொண்ட இங்குள்ள விவசாயிகள் தினை, சாமை, கேழ்வரகு, சோலம், வெள்ளரி போன்றவற்றை அதிகளவில் பயிர் செய்து வருகின்றனர். பெரும்பாலும் பருவ மழையை நம்பியும், கிணற்று நீரை நம்பியும் பயிர் செய்கின்றனர்.

அதேபோல், தங்களது நிலங்களில் உள்ள கிணறுகளில் அதிகளவில் மீன்களை வளர்த்தும் வருகின்றனர். அந்த மீன்களை விற்று சிறிது லாபமும் ஈட்டி வருகின்றனர். மலை கிராமங்களில் போதிய குடிநீர் வசதி இல்லாத போதிலும் இந்த கிணறுகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கள்ளச்சாராயம் தடுப்பு வேட்டையில் ஈடுபடும் போலீசார் அங்கு பறிமுதல் செய்யப்படும் பல நூறு கிலோ வெல்லத்தை விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் கொட்டி விட்டு செல்வதாக மலைவாழ் மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது: முன்பெல்லாம் மலை கிராமங்களில் அதிகளவில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்தனர். இப்போது கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிந்து விட்டது. இருந்தாலும் ஒரு சிலர் சட்ட விரோதமாக அடர்ந்த காட்டுப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் மதுவிலக்கு தடுப்பு போலீசார் வனப்பகுதிக்குள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, கடந்த சில நாட்களாக போலீசார் வனப்பகுதியில் கள்ளச்சாராயம் தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பல நூறு கிலோ வெல்லத்தை குடிநீர் கிணறுகளில் கொட்டி விட்டு சென்றுள்ளனர். இதனால் கிணறுகளில் வளர்த்து வந்த மீன்கள் செத்து மிதப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல், குடிநீரும் முற்றிலுமாக சுகாதாரமற்ற முறையில் மாறிவிட்டது. தற்போது கிணற்றில் செத்து மிதக்கும் மீன்களை ஆபத்தான முறையில் நாங்களே கயிறு கட்டி கிணற்றில் இறங்கி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எனவே, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இதில் தலையிட்டு இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.