மங்கலம்பேட்டை அருகே ஆசிரியையை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி தாளாளரின் மகன் கைது
மங்கலம்பேட்டை, அக். 25: கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே உள்ள விஜயமாநகரம் புது விளாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் (60), விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள். இதில் இளைய மகளை நெய்வேலி பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். மூத்த மகள் ராதிகா(35), மங்கலம்பேட்டை அடுத்த வீராரெட்டிக்குப்பத்தில் உள்ள ஒரு மழலையர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 17ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற ராதிகா, இரவு அவரது தாய் விஜயநிர்மலாவுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு, தூங்கச் சென்றார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் ராதிகா அறையின் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த ராஜவேலுவும், அவரது மனைவியும் கதவை உடைத்து பார்த்தபோது, புடவையால் ராதிகா தூக்குப்போட்டு இறந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் ராஜவேல் கொடுத்த புகாரின்பேரில், மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சந்தேக மரணத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், வீராரெட்டிக்குப்பம் கிராமத்தில், தான் பணிபுரிந்து வந்த தொடக்க பள்ளியின் உரிமையாளரான ஜேசுதாஸ் ராஜா மகன் பிரின்ஸ் நவீன் (37) என்பவரும், ராதிகாவும் காதலித்து வந்துள்ளனர். அதே பள்ளியில் சமையலராக வேலை செய்து வரும் மற்றொரு பெண்ணையும் பிரின்ஸ் நவீன் காதலித்து வந்தது ராதிகாவுக்கு தெரிய வந்ததையடுத்து, இது தொடர்பாக பிரின்ஸ் நவீனை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசிய ராதிகா, பின்னர் தனது வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு கொண்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, ராதிகாவை தற்கொலைக்கு தூண்டியதாக பிரின்ஸ் நவீனை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.