தனியார் கம்பெனி ஊழியர் மர்ம சாவு
வானூர், அக். 23: சென்னை பட்டாபிராம் சூரஞ்சேரி அண்ணா நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (35). இவர் வானூர் அருகே உள்ள ராவுத்தன்குப்பத்தை சேர்ந்த ஆனந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டு மாமியார் வீட்டில் வசித்து வந்தார். சேதராப்பட்டில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தவர் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு வானூரில் சுந்தரமூர்த்தி என்பவரது வீட்டில் 3 மாதமாக வாடைக்கு இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் இவரை அவரது மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை கிருபாகரன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். சம்பவம் குறித்து வானூர் போலீசுக்கு தகவல் கொடுத்ததின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி கனகசெட்டிகுளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.