பல்வேறு இடங்களில் போதையில் ரகளை 11 பேர் அதிரடி கைது
புதுச்சேரி, அக். 18: புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்தியால்பேட்டை பாப்பம்மாள் கோயில் வீதி சுடுகாடு அருகே ஒரு நபர் குடிபோதையில் அவ்வழியே செல்லும் மக்களுக்கு இடையூறாக, முகம் சுளிக்கும் வகையில் அநாகரிகமாக சத்தம் போட்டுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த நபர் தப்பியோட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து விசாரித்ததில், வைத்திக்குப்பத்தை சேர்ந்த பிரசாந்த் (24) என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.
அதேபோல், முத்தியால்பேட்டை குருசுக்குப்பம் மெயின் ரோட்டில் கடற்கரை அருகே நள்ளிரவு போதையில் ரகளை செய்த குருசுகுப்பம் பால்ராஜ் (28), வாழைக்குளம் பாலச்சந்தர் (28), சதீஷ் (28), முத்தியால்பேட்டை அங்காளம்மன்நகர் கார்த்திக் ராஜா (28), வைத்திக்குப்பம் ராஜ்கமல் (27), கருவடிக்குப்பம் பாரதிநகர் கோகுல் (24) ஆகிய 6 பேரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்தனர்.இதேபோன்று, ரெட்டியார்பாளையம் செல்லம்பாப்புநகர் 4வது மெயின் ரோட்டில் இரவு 10.30 மணியளவில் அவ்வழியே செல்லும் பொதுமக்களை குடிபோதையில் திட்டிக் கொண்டிருந்த சொக்கநாதன்பேட் பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (29) என்பவரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர். கருவடிக்குப்பம் இடையான்சாவடி ரோடு பம்ப் ஹவுஸ் அருகே நள்ளிரவில் ரகளை செய்த முத்தியால்பேட்டை ராமலிங்கம் நகர் கார்த்திக் (30), லாஸ்பேட்டை இசிஆர் திருமண மஹால் அருகே நள்ளிரவு குடிபோதையில் ரகளை செய்த பெருமாள் (38) ஆகியோரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர். வில்லியனூர் கண்ணகி பள்ளி அருகே ரகளை செய்த ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (எ) சரவணன் (50) என்பவரை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர்.