ஆன்லைனில் பகுதிநேர வேலை, உடைகள் விற்பனை எனக்கூறி 3 பெண் உள்பட 7 பேரிடம் ரூ.2.35 லட்சம் மோசடி
புதுச்சேரி, அக். 18: புதுச்சேரியில் ஆன்லைனில் பகுதிநேர வேலை மற்றும் ஆடைகள் விற்பனை எனக்கூறி 3 பெண்கள் உள்பட 7 பேரிடம் ரூ.2.35 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி பாகூர் பகுதியை சேர்ந்த ஒருவரை வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலமாக மர்ம நபர் தொடர்பு கொண்டு, பகுதிநேர வேலையில் டாஸ்குகளை முடிப்பதன் மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண் ரூ.1.34 லட்சம் அனுப்பியுள்ளார். அதற்கான லாபம் கிடைக்கவில்லை, செலுத்திய தொகையையும் திரும்பப்பெற முடியவில்லை. அதன்பிறகே அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். அதேபோல், அரியாங்குப்பத்தை சேர்ந்த பெண்ணிடம் ஆன்லைன் பகுதிநேர வேலை எனக்கூறி ரூ.25 ஆயிரத்தை மர்ம நபர் ஏமாற்றியுள்ளர்.
அதேபோன்று, நல்லவாடு பகுதியை சேர்ந்த ஆண் நபர், பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை நம்பி ரூ.65 ஆயிரத்துக்கு ஸ்நூக்கர் டேபிள் ஆர்டர் செய்து பணத்தையும், உப்பளத்தை சேர்ந்த பெண், ரூ.1199க்கு டிரஸ் ஆர்டர் செய்தும் ஏமாந்துள்ளனர். லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபரிடம் ரூ.6 ஆயிரத்திற்கு கேமரா விற்பதாக கூறி ரூ.6 ஆயிரத்தை ஏமாற்றியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த பெண், ரூ.1,300க்கு டிரஸ் ஆர்டர் செய்து ஏமாந்துள்ளார். முத்தியால்பேட் பகுதியை சேர்ந்த ஆண் நபரிடம் ரூ.2,900க்கு ப்ரீ பயர் கேம் இலவசமாக தருவதாகக்கூறி ரூ.2,900ஐ மர்ம நபர் அபேஸ் செய்துள்ளார். மேற்கண்ட பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உள்பட 7 பேர், புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.