Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சின்னசேலம் அருகே பரபரப்பு மனித கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு மறியலால் போக்குவரத்து பாதிப்பு

சின்னசேலம், பிப். 5: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நைனார்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சி கடலூர்-சேலம் நெடுஞ்சாலையில் உள்ளது. இக்கிராமத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை அரைக்கும் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு மனித கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் கடந்த சில தினங்களாக நடந்து வந்ததாக தெரிகிறது. ஆனால் இங்கு மனித கசடு சுத்திகரிப்பு நிலையம் கட்டினால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது என எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அதிகாரிகளிடம் மக்கள் மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை சுமார் 8.45 மணியளவில் சேலம்-கடலூர் நெடுஞ்சாலை நைனார்பாளையத்தில் 750க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ஏராளமான வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பள்ளி செல்லும் பேருந்துகளும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி மனோகரன், தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார், சின்னசேலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஏழுமலை, கீழ்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார், முக்கிய பிரமுகர்கள் வந்து மக்களிடம் மறியலை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் இந்த திட்டத்தில் உள்ள பாதிப்புகளை எடுத்துக்கூறி இந்த திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சாலை மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.