தியாகதுருகம், நவ.1: தியாகதுருகம் அருகே காதலியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த விளக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் சதீஷ்(21). அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகள் பவித்ரா. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பவித்ராவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில் பவித்ரா சதீஷிடம் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்து பெண் கேட்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு பவித்ராவின் தந்தை ஏழுமலை மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தனது மகள் பவித்ராவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை நிச்சயிக்கப்பட்டு திருமணப் பத்திரிகைகளை தனது உறவினர்களிடம் பவித்ராவின் தந்தை ஏழுமலை கொடுத்து வந்துள்ளார். இதை அறிந்துகொண்ட சதீஷ் சமூக வலைத்தளத்தில் வாட்ஸ்-அப் குழு ஒன்றை உருவாக்கியுள்ளார்.
அதில் பவித்ராவின் உறவினர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து அந்தக் குழுவில் நானும் பவித்ராவும் காதலித்து வருகிறோம். ஆனால், அதற்கு பவித்ராவின் தந்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பவித்ராவிற்கு அவசரமாக திருமண ஏற்பாடு நடைபெற்று வருவதாக குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் சதீஷ் பவித்ராவும் காதலித்தபோது எடுத்த புகைப்படங்களையும் அந்தக் குழுவில் அனுப்பியுள்ளார். இந்த தகவல் மாப்பிள்ளை வீட்டிற்கு தெரியவரவே பவித்ராவின் தந்தை ஏழுமலையிடம் மாப்பிள்ளை வீட்டார் இந்த திருமணம் நடைபெறாது என்று தகராறு செய்து திருமணத்தை நிறுத்திவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பவித்ரா தியாகதுருகம் காவல் நிலையத்தில் தனது திருமணத்தை நிறுத்திய சதீஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்ததன் பேரில் போலீசார் சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

