Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

புதுவையில் பரிதாபம் கிரிக்கெட் வீராங்கனை தூக்குபோட்டு சாவு

புதுச்சேரி, மே 1: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் காஷ்மீர் குமார். இவர் சென்னையில் ஜிஎஸ்டி கண்காணிப்பாளராக உள்ளார். இவரது மகள் ஏஞ்சல் காங்கவி(19). இவர் புதுவை தனியார் கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள ஏஞ்சல் காங்கவி, புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து விளையாடி வந்தார். கதிர்காமத்தில் உள்ள துரைராஜ் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். இவருக்கு தினமும் பெண்மணி ஒருவர் சமையல் செய்து கொடுத்துவிட்டு செல்வது வழக்கம். கடந்த 6 மாதங்களுக்கு முன், டி20 போட்டிக்கான வீராங்கனைகள் பட்டியலுக்கு ஏஞ்சல் தேர்வாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் சில வாரங்களாக சோகத்தில் மூழ்கியிருந்த அவர், பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கிரிக்கெட் பயிற்சியை முடித்துவிட்டு, இரவு வீடு திரும்பிய ஏஞ்சல் காங்கவி, சோகத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஏஞ்சல் தனது பயிற்சியாளர் கதிர்வேலுக்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர் வேலை காரணமாக செல்போனை எடுக்கவில்லை என தெரிகிறது. நீண்டநேரம் கழித்து ஏஞ்சலுக்கு அவர் திரும்ப போன் செய்தபோது, அவர் அழைப்பை ஏற்காத நிலையில், சிறிது நேரத்திற்குபின் ஏஞ்சல் வசிக்கும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த மின்விசிறியில் ஏஞ்சல் காங்கவி தூக்கில் தொங்கியபடி கிடந்த நிலையில், உடனடியாக வீட்டின் உரிமையாளர் துரைராஜ் உதவியுடன் கதவை உடைத்து ஏஞ்சலை மீட்ட அவர், கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஏஞ்சல் காங்கவி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வீட்டின் உரிமையாளரான துரைராஜ், கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். ஏஞ்சல் காங்கவி வசித்த வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, அவர் தற்கொலை செய்வதற்கு முன் கைப்பட எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், என் வாழ்க்கை இவ்வளவு நாள் தான் என்பது கடவுள் எழுதி வைத்தது... என் மரணத்திற்கு நான் தான் காரணம்... வேறு யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை... அம்மா, அப்பா மிஸ் யூ... என ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார். அவரது செல்போனை போலீசார் சோதனையிட முயன்றபோது அது லாக் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை. டி20 போட்டிக்கு தேர்வாகாத விரக்தியில் இம்முடிவை எடுத்தாரா, அல்லது பெற்றோர் தன்னுடன் இல்லையே என்ற வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.