வடலூர், ஆக. 29: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அணுக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் சந்தோஷ்குமார்(39). கூலித் தொழிலாளியான இவருக்கு, 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற சந்தோஷ்குமார் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை 10 மணியளவில், அப்பகுதியில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் வேட்டியால் மரத்தில் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்குவதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து வந்த குள்ளஞ்சாவடி காவல் துறையினர், சந்தோஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி கவிதா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மகன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் ராஜகுமாரி(65), வீட்டிலேயே அழுதுகொண்டிருந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், போலீசார் வந்து ராஜகுமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



