Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

நெய்வேலி முதலாவது சுரங்கத்துக்கு வேலைக்கு சென்றபோது தடுப்புக்கட்டையில் மோதி என்எல்சி ஊழியர் பலி

நெய்வேலி, ஜூலை 23: நெய்வேலி முதலாவது சுரங்கத்துக்கு வேலைக்கு சென்றபோது தடுப்புக்கட்டையில் மோதி என்எல்சி ஊழியர் பலியானார். கடலூர் மாவட்டம் நெய்வேலி அரசக்குழி அடுத்த கொம்பாடிகுப்பம் ரோடு தெருவை சேர்ந்தவர் கங்காசலம் (59). இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது. கங்காசலம் என்எல்சி முதலாவது சுரங்கத்தில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று காலை 6 மணிக்கு கங்காசலம் தனது இருசக்கர வாகனத்தில் முதலாவது சுரங்கத்துக்கு சென்றபோது முதலாவது சுரங்க நுழைவு வாயில் முன்பு இருந்த தடுப்பு கட்டையில் எதிர்பாராதவிதமாக மோதி பலத்த காயமடைந்தார். அப்போது அருகில் இருந்த ஊழியர்கள் அவரை மீட்டு என்எல்சி ஆம்புலன்ஸ் மூலம் என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கங்காசலம் உறவினர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் என்எல்சி மருத்துவமனையில் முன்பு குவிந்தனர். மேலும் உயிரிழந்த கங்காசலம் குடும்பத்தில் ஒருவருக்கு என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர வேலை வழங்கக்கோரி மருத்துவமனையில் காத்திருந்தனர். இதையடுத்து என்எல்சி செயல் இயக்குனர் ராஜ்குமார் முன்னிலையில் என்எல்சி தொமுச பொதுச்செயலாளர் குருநாதன், தலைவர் ஞான ஒளி, பொருளாளர் அப்துல் மஜித், அலுவலக செயலாளர் சீனிவாசன், அண்ணா தொமுச பொதுச்செயலாளர் வெற்றிவேல் மற்றும் உயிரிழந்த கங்காசலத்தின் உறவினர்கள் உள்ளிட்டோர் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில், உயிரிழந்த கங்காசலம் குடும்பத்தில் இருவருக்கு நிரந்தர வேலை வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால் என்எல்சி அதிகாரிகள் தரப்பில் எந்த முடிவும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் கங்காசலம் உடலை பெறுவதற்கு அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக நாளை (இன்று) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.