Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூர், ஜூலை 16: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஆன்மீக திருத்தலமான  அங்காளம்மன் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆனி மாத அமாவாசை தினத்தையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு நெய், சந்தனம், தயிர், வாசனை திரவியங்கள், பல வண்ண மலர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து உற்சவர் அங்காளம்மன்  லலிதா திரிபுரசுந்தரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆனி மாத அமாவாசை தினம் என்பதால் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து இரவு 11 மணி அளவில் அங்காளம்மனை தோளில் சுமந்து வடக்கு வாயில் எதிரே அமைந்துள்ள ஊஞ்சல் மேடைக்கு கொண்டு வந்து ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடல்களை பாடி ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கையில் அகல் விளக்கை ஏந்தி அங்காளம்மா தாயே! அருள் புரிவாயே! என பக்தி பரவசத்தில் அங்காளம்மனை வழிபட்டனர். இந்த ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியில் 637 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாட்டை கோயில் உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர்கள் பச்சையப்பன், சுரேஷ், மதிஅழகன், சேட்டு (எ) ஏழுமலை, சரவணன், வடிவேலு, சந்தானம், கோயில் மேலாளர் சதீஷ், காசாளர் மணி, மணியம் குமார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.