Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்டமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி புதுவை காங்., தலைவர் பதவியை வைத்திலிங்கம் திடீர் ராஜினாமா

புதுச்சேரி, மே 8: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால், தார்மீக பொறுப்பேற்று காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்தார்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்.9ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ்-16, திமுக-13, விசிக-1 என தொகுதி பங்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுக, விசிக போட்டியிட்ட 6 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறாமல் போட்டியிட்டனர். இது கூட்டணி கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதுடன் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைந்தது. இதனால் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 16 இடங்களில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது.

இந்த தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை வைத்திலிங்கம் எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, வைத்திலிங்கம் எம்பி தனது மாநில தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு காங்கிரஸ் தலைவராக வாய்ப்பு வழங்கிய தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் கொடுத்த பணியை சரிவர செய்து வந்தேன். இருப்பினும், தேர்தலில் காங்கிரஸ் கட்சி முழுமையான அளவில் வெற்றி பெற முடியவில்லை. இதற்கு தார்மீக பொறுப்பேற்று காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். என்னுடைய ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.