Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

விருத்தாசலத்தில் பரபரப்பு; 2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் நகை, பணம் திருட்டு

விருத்தாசலம், ஜூலை 6: விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்தவர் மாதேஸ்வரன் மனைவி தையல்நாயகி(56). இவர் விருத்தாசலம் வடக்கு கோட்டை வீதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஓட்டலில் சமையல் வேலை இருந்ததால் வீட்டை பூட்டிவிட்டு உணவகத்திற்கு சென்று விட்டார். தொடர்ந்து நேற்று காலை அவரது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் தையல் நாயகி சென்று வீட்டை பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்ட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் சிதறி கிடந்ததுடன் பீரோவில் இருந்த மூன்றே முக்கால் பவுன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

அதேபோல் விருத்தாம்பிகை நகர் பெத்து மனைவி வேம்பாயி(70) என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் இரவு சின்னவட வாடியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில் அவரது வீட்டையும் நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான 5 பவுன் நகை மற்றும் ரூ. ஐம்பதாயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது. இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் தகவல் அறிந்து சம்பவ இடங்களுக்கு விருத்தாசலம் போலீசார் சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விருத்தாசலத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளை மர்ம நபர்கள் உடைத்து சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை திருடி சென்ற சம்பவம் விருத்தாசலம் பகுதி மக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.