மதுவானைமேடு கிராமத்தில் மின் இணைப்பு வழங்கப்படாத நிலையில் ரூ.428 மின் கட்டணம் வந்ததால் விவசாயி அதிர்ச்சி
சேத்தியாத்தோப்பு, ஆக. 5: புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கப்படாத நிலையில், ரூ.428 மின் கட்டணம் வந்ததால் விவசாயி அதிர்ச்சி அடைந்துள்ளார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மதுவானைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்(48), விவசாயி. இவர் புதிய வீடு கட்டிவரும் நிலையில், முன்கூட்டியே மின் இணைப்பு பெற ஆன்லைனில் பணம் செலுத்தியுள்ளார்.வீட்டின் கட்டுமானப் பணிக்காக கொட்டகை அமைத்து, மீட்டர் பலகை மற்றும் வயரிங் வேலைகளைச் செய்து முடித்துள்ளார். ஆனால், இதுவரை மின் இணைப்போ அல்லது புதிய மீட்டர் பாக்ஸோ அவருக்கு வழங்கப்படவில்லை.இதற்கிடையே, எவ்வித மின் பயன்பாடும் இல்லாத இவருக்கு ரூ.428 மின் கட்டணம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகுமார், அந்தத் தொகையைச் செலுத்திவிட்டு அதற்கான பில்லை பெற்றுள்ளார். மேலும் அவருக்கான புதிய மின் இணைப்பு கொடுப்பது தாமதமாவதால், வீடு கட்டுமானத்திற்காக தண்ணீர் இறைக்க கை டிராக்டரைப் பயன்படுத்தி கூடுதல் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்.


