Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம்

கள்ளக்குறிச்சி, ஆக. 4: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால்தான் கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவடடம் சங்கராபுரம் அருகில் உள்ள கிடங்குஉடையான் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகள் சுவேதா(30). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தை சேர்ந்த மதியழகன்(33) என்பவருக்கும் கடந்த 4 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இத்தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சுவேதா மீண்டும் கர்ப்பமடைந்து 2வது பிரசவத்திற்காக 5 மாதத்திலேயே கிடங்குஉடையான் கிராமத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். வடபொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதந்தோறும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1ம்தேதி நிறைமாத கர்ப்பிணியான சுவேதாவை பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி நகரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை சுமார் 4.15 மணியளவில் சுவேதாவிற்கு அழகான ஆண் குழந்தை சுகபிரவசதில் பிறந்துள்ளது.

இந்நிலையில் மாலை சுமார் 6.15 மணியளவில் சுவேதாவிற்கு ரத்தபோக்கு அதிகமானது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுவேதா இரவு 10 மணி அளவில் இறந்துவிட்டதாக சுவேதாவின் கணவர் மற்றும் உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மதியழகன் மற்றும் அவரது உறவினர்கள், மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்காமல் தவறான சிகிச்சையால் தான் சுவேதா உயிரிழந்ததாகவும் இறந்து வெகுநேரம் கழித்து ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்ட பின்னர் தான் தகவல் அளிக்கப்பட்டதாக கூறி மருத்துவர்களிடம் சுவேதாவின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பணியில் இருந்த காவலர்கள் ராமதாஸ், பாக்கியராஜ் உள்ளிட்ட போலீசாரிடம் சுவேதா இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது கணவர் மதியழகன் மற்றும் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்த புகாரை பெற போலீசார் மறுத்ததாகவும், மேலும் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் போலீசாருடன் சுவேதாவின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்ததும் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், வரஞ்சரம் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கு வந்த கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பவானி மற்றும் மருத்துவ குழுவினர் சுவேதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கினர். அதில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் இதுபோன்று ஆயிரத்தில் ஒருவருக்கு பிரசவத்தின் போது அதிக ரத்தபோக்கு வெளியேறி உயிர் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

பின்னர் இறந்துபோன சுவேதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுமதியுங்கள் என்றும், அதில் உயிரிழப்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பது தெரியவந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் பவானி உறுதியளித்தார். அதனை ஏற்றுக்கொண்டு சுவேதாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக அதிகாலை சுமார் 2 மணியளவில் ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து 5 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இறந்துபோன சுவேதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.