Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவையில் 994 பேருக்கு இலவச மனை பட்டா

கோவை, ஜன. 1: கோவை மாவட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறிச்சி பிள்ளையார்புரம் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வரும் பட்டா இல்லாத நபர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பட்டாவில் உள்ள அளவு வேறுபாடுகள் மற்றும் நான்கு எல்லைகளில் உள்ள வேறு பாடுகளை களைந்து சரியான பட்டா தயார் செய்து தகுதியான 814 பயனாளிகளுக்கும், குறிச்சி சில்வர் ஜூப்லி அரசு புறம்போக்கு மயானத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வரும் 73 பயனாளிகளுக்கும், போத்தனூர் வண்ணாரபேட்டை அரசு புறம்போக்கில் வசித்து வரும் 14 பயனாளிகளுக்கும் சீனிவாசாபுரம் கல்லாங்குத்து புறம்போக்கில் வசித்துவரும் 9 பயனாளிகளுக்கும். இந்திரா காலனி நத்தம் புறம்போக்கில் வசித்து வரும் 29 பயனாளிகளுக்கும், ஈச்சனாரி பாடசாலை வீதி மற்றும் கணேசபுரம் ஆகிய நத்தம் புறம்போக்கில் வசித்து வரும் 18 பயனாளிகளுக்கும் மதுக்கரை குரும்பம்பாளையம் பகுதியில் வசித்து வரும் 12 பயனாளிகளும், பிச்சனூர் கிராமத்தில் வசித்து வரும் 25 பயனாளிகள் பட்டா வழங்கப்பட்டது. மொத்தம் 994 பயனாளிகளுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கோவையில் நடந்த விழாவில் இலவசமாக மனை பட்டா வழங்கினார்.

பட்டா பெற்ற மதுக்கரை தாலூகா குறிச்சி சில்வர் ஜூப்லி பகுதியை சேர்ந்த பழனியம்மாள் கூறுகையில், ‘‘நான் சமையல் வேலை செய்து வருகிறேன். எங்களுக்கு சொந்தமாக எந்தவொரு சொத்தும் கிடையாது. நாங்கள் இருக்கும் இடத்திற்கு வீட்டுமனைப் பட்டாவேண்டி மதுக்கரை தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கினோம். நீண்டநாள் கோரியினை ஏற்று தற்போது நாங்கள் வீடு கட்டி இருக்கும் இடத்தை எங்களுக்கு பட்டா போட்டு கொடுத்திருக்கிறார்கள். பட்டா பெற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடத்திற்கு பட்டாவை கொடுத்து எங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்றார்.

இதேபோல் சில்வர் ஜூப்லி நகர் லட்சுமி கூறுகையில், ‘‘நான் சமையல் வேலை செய்கிறேன். இங்கே 25 ஆண்டாக வசிக்கிறேன். நாங்கள் வசிக்கும் இடம் புறம்போக்கு பகுதி. இங்கே வீடு கட்சி வசித்து வருகிறோம். இங்கேயே எங்களுக்கு பட்டா வழங்கியது மகிழ்ச்சி’’ என்றார்.