சென்னை: பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள் நவீன வாசிக்கும் கருவி பெற்றிட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் சிறப்பு பள்ளிகள், அனைத்து பள்ளிகள் ஆகியவற்றில் உயர்நிலைபள்ளியில் பயிலும் பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நவீன வாசிக்கும் கருவி வழங்கப்பட்டு வருகிறது.
இண்டர்நெட் ரேடியோ, யுஎஸ்பி பென் டிரைவ் மற்றும் எஸ்டி கார்டு சேமிக்கும் வசதி, தமிழ் உள்பட மற்ற மொழிகளில் படிக்க உதவும் வசதி, நெட்வொர்க் இணைப்பு: வைபை தவிர, மொபைல் போனின் ஹாட் ஸ்பாட்டுடன் இணைக்கும் வசதி. டெய்சி புத்தகங்களை பதிவேற்றம் செய்தல், மின் புத்தகங்கள். வீடியோக்கள், ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தி நேரடியாக பதிவிறக்கம் செய்தல், குரல் குறிப்புகள் மற்றும் உரை குறிப்புகளை பதிவு செய்யும் வசதி, பார்வையற்றவர்களால் பயன்படுத்த எளிதான தொட்டுணரக்கூடிய பொத்தான்கள், டக், டெய்சி, இ-பப், பிடிஎப், எச்.டி.எம் ஆகியவற்றை எளிதாக படிக்கவும் பேசக்கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய பொத்தான்கள் வழங்கப்பட்டுவருகிறது.
இந்த வசதிகள் கொண்ட நவீன வாசிக்கும் கருவி பெற்றிட தென் சென்னைக்குட்பட்ட உயர்நிலைபள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பார்வை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்கள் தேவைபடின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை சென்னை-600006 தொலைபேசி எண்: 044- 24714758 என்ற முகவரியில் நேரடியாகவோ, தபால் அல்லது தொலைபேசி வாயிலாகவோ தகவல்கள் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
