மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை: மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர், நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகிறது.சென்னை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) அ.அனுசுயாதேவி வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு 2024ம் ஆண்டில் சுதந்திர தின விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு விருதுகள் வழங்கவுள்ளது. சிறந்த சமூக சேவகருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கம் மற்றும் சான்றிதழும், சிறந்த நிறுவனத்திற்கு ரூ.50,000 ரொக்க பரிசு, 10 கிராம் எடையுள்ள தங்கம் மற்றும் சான்றிதழும் வழங்கவுள்ளன.
ஆகவே, பெண்களின் முன்னேற்றத்திற்காக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். தகுதியானவர்கள் விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் awards.tn.gov.in ஆன்லைன் மூலம் வருகிற 20ம் தேதி வரை விண்ணப்பம் செய்திடலாம். இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி கையேட்டில் இணைக்கப்பட வேண்டியவற்றை இணைத்து முழுமையான கையேடு மற்றும் விண்ணப்பத்தினை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வருகிற 22ம் தேதி மாலை 4 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
