Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தற்போது பாதிப்பு இல்லாததால் சுழற்சி முறையில் தினமும் 30 முகாம்கள் சென்னையில் அதிக மழை பெய்தால் 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள்: மேயர் பிரியா தகவல்

சென்னை, அக்.30: தற்போது பாதிப்பு இல்லாததால் சுழற்சி முறையில் தினமும் 30 முகாம்கள் நடந்து வரும் நிலையில் சென்னையில் அதிக மழை பெய்தால் 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், கட்டடத்தின் ஒரு சில பகுதி சிதைந்துள்ளது. இவற்றை இடித்து புதிய கட்டிடமாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ள நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் இப்பள்ளியை நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மேயர் பிரியா பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மண்டலம் 6க்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருவிக நகர் பகுதியில் ஓட்டேரி நல்லா கால்வாய் செல்லும் வழிகளில் பல கேனால்கள் ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்தப் பகுதிகள் இன்று ஆய்வு செய்யப்பட்டது. செல்லப்பா தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதற்கான டெண்டர் வரும் நாட்களில் போடப்பட்டு பணிகள் தொடங்கப்படும். வட சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு சாலைகளில் மெட்ரோ துறை சார்பில் கழிவு நீர் மற்றும் குடிநீர் பணிகள் நடைபெற்று வருகிறது. வடசென்னை வளர்ச்சி திட்டம் சார்பில் என்னென்ன பணிகள் நடைபெற்று முடிந்துள்ளதோ அந்த சாலைகள் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிஎம்டிஏ துறை மூலம் படைப்பகம் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்பு கட்டிடப் பணிகள் முழுவதும் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் சாலை போடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் தார் சாலைகள் போடப்பட்டால் தரமாக இருக்காது. ஜனவரி மாதத்தில் மீண்டும் புதிய சாலைகள் போடப்படும். மழைக்காலங்களில் பொதுவாகவே சாலைகள் சேதம் அடையும் சூழல் ஏற்படும், அதன்படி ஒவ்வொரு பகுதிகளிலும் எத்தனை பள்ளங்கள் இருக்கிறது என்று வார்டு வாரியாக கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அவற்றை கலவைகள் கொண்டு தற்காலிகமாக சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென் சென்னை பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலைகள் இருப்பதால் அவர்களிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது அவர்கள் சார்பிலும் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி சார்பாக தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அந்த பகுதி மக்கள் பள்ளிகள் அல்லது சமுதாய நலக்கூடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி முழுவதும் வார்டு வாரியாக மருத்துவ முகாம்கள் போடப்பட்டு வருகின்றன. மழைக்காலங்களில் சேற்றுப் புண் அதிகம் வரும் சூழல் இருப்பதால் அந்த மருந்து அதிகம் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு தேவை அடிப்படையில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வார்டு வாரியாக ஒரு நாளைக்கு 30 முகாம்கள் என சுழற்சி முறையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு முகாம்களிலும் 150 பேர் வரை பயனடைகிறார்கள். அதிக மழை இருந்தால் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம்கள் போடப்படும். தற்போதைய சூழல் அதிக அளவு மழை பாதிப்பு இல்லாத காரணத்தால் 30 முகாம்கள் ஒரு நாளைக்கு என சுழற்சி முறையில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் அடையாறு முகத்துவாரம் பகுதிகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு மேன்கொண்டனர். நேப்பியர் முகத்துவாரம், அடையாறு முகத்துவாரம் ஆகியவை சென்னை மாநகராட்சி பகுதியில் இருக்கும் அனைத்து கேனால்கள் வந்து கடலில் கலக்கும் முக்கியமான பகுதியாக இருக்கிறது.

நேப்பியர் பகுதியில் பணிகள் நிறைவடைய உள்ளது. அடையாறு பகுதியில் நீர்வளத்துறை சார்பில் அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வது போல் அடையாறு பகுதியிலும் தமிழக முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கடந்த முறை 1,50,000 பேருக்கு காலை உணவு, 2,70,000 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. இனி நவம்பர் 10ஆம் தேதி அளவில்தான் மழை அதிகமா இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மழை அதிகம் இருக்கும் பட்சத்தில் தேவையானவர்களுக்கு உணவு மாநகராட்சி தரப்பில் வழங்கப்படும்.

சிந்தாதிரிப்பேட்டையில் மைய சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தாழ்வான பகுதிகள் இருக்கும் இடங்களுக்கு அருகிலேயே சமையல் கூடங்கள் இந்த முறை அமைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது, இந்த முறை சமையல் கூடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உணவு தயாரிப்பது மற்றும் சரியான நேரத்தில் உணவு கொண்டு செல்லப்படுகிறதா உள்ளிட்டவை குறித்து அதன் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது, என தெரிவித்தார்.