Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிமுக அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோவுக்கு கொலை மிரட்டல்; காவல் துறையில் புகார்

சென்னை, நவ.27: அதிமுக அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோவிற்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அமைப்பு செயலாளராக பதவி வகித்து வருபவர் ராயபுரம் ஆர்.மனோ. இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னையில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். ஏற்கனவே, சென்னை மாநகராட்சி கவுன்சிலராக பதவி வகித்தவர். இவர் சென்னை துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் தொழிலை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது உறவினரான தாய்மாமன் மகன் தரணி குமார் என்பவர், இவரது பெயரை பயன்படுத்தி பல்வேறு தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டி வருவதாக ராயபுரம் மனோவுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தகவல் தெரிவித்தனர். கடந்த 20 ஆண்டுகளாக தரணி குமாருக்கும், தனக்கு எந்த தொடர்பும் இல்லாத போது இதுபோன்ற புகார்கள் வந்ததால் அதிர்ச்சி அடைந்த ராயபுரம் மனோ, நேரடியாக தரணி குமாரின் அலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்.

அவரிடம், எனது பெயரை பயன்படுத்தி ஏன் இப்படி செய்கிறாய்? என கேட்டுள்ளார். அதற்கு தரணி குமார் ராயபுரம் மனோவை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி வெட்டி ெகாலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். மேலும் மீண்டும் மீண்டும் 30க்கும் மேற்பட்ட முறை தொடர்ந்து அலைபேசியில் ராயபுரம் மனோவை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையரிடம் ராயபுரம் மனோ புகார் அளித்துள்ளார். அதிமுக அமைப்பு செயலாளருக்கு உறவினர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் வடசென்னை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையரிடம் ராயபுரம் மனோ அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக அமைப்பு செயலாளராகவும், தொழில் அதிபராகவும் உள்ளேன். எனது உறவினர் தரணிக்குமார் எனது பெயரை பயன்படுத்தி தொழில் அதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டி வருவதாக தகவல் கிடைத்தது. அவரை தொடர்பு கொண்டு கேட்ட போது, என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கிறார். என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்படையச் செய்கிறார். எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் செயல்படும் தரணிக்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.