Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தலைமை செயலக நுழைவாயில் அருகே 2 மகள்களுடன் தாய் தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி

சென்னை, ஜூலை 31: வீட்டை காலி செய்யக்கூறி உரிமையாளர் மிரட்டியதால் மனமுடைந்து, முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்க வந்த தாய் மற்றும் அவரது 2 மகள் தலைமை செயலகத்தின் 4வது நுழைவாயிலில் அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இஸ்லாமிய பெண் ஒருவர், தனது 2 மகள்களுடன் நேற்று காலை தலைமை செயலகத்தில் உள்ள 4வது நுழைவாயில் அருகே உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் பொதுமக்கள் புகார் அளிக்க வரிசையில் காத்திருந்தார். சிறிது நேரத்தில் அவர் தனது 2 மகள்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்கள் அருகில் சென்று பார்த்த போது, கையில் புகார் மனுக்கள் மற்றும் மாத்திரைகள் சில இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே போலீசார் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மயங்கிய நிலையில் கிடந்த 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ைவத்தனர். அந்த நேரத்தில் மயக்க நிலையில் இருப்பதால் அவர்கள் என்ன புகார் மனு அளிக்க வந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த முடியாத நிலை இருந்தது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திருச்சியை சேர்ந்த தாய், தனது 2 மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருவதும், வீட்டின் உரிமையாளர் திடீரென வீட்டை காலி செய்ய கூறி நெருக்கடி கொடுத்து வந்ததும் தெரிந்தது.

தனது 2 மகள்களுடன் திடீரென வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று கேட்டதற்கு, வீட்டின் உரிமையாளர் மிரட்டுகிறார். இதுகுறித்து திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வந்ததாக தெரிவித்தார். தற்போது, தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட 3 பேரும் நலமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதைதொடர்ந்து தற்கொலை முயற்சி தொடர்பாக கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தலைமை செயலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.