Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூட்டையில் வைத்த ரூ.28 ஆயிரம் செல்போன் திரும்ப ஒப்படைப்பு

பள்ளிபாளையம், ஜூலை 15: குடிபோதையில் தெருவில் மயங்கிய தொழிலாளியின் பையில் இருந்த ரூ.28 ஆயிரம் பணம், 2 செல்போன்கள், போதை தெளிந்த பின்னர் போலீசார் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், அரச்சலூரை சேர்ந்தவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி சண்முகசுந்தரம்(40). கடந்த 2 மாதங்களாக, பள்ளிபாளையத்தில் தங்கி கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்தது. இதனால் வேலை செய்த கூலிப்பணம் ரூ.50 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு ஆவத்திபாளையத்தில் உள்ள பாட்டியை சென்று பார்த்து விட்டு, பஸ் மூலம் ஈரோடு புறப்பட்டார்.

ஆனால், ஈரோடு செல்லாமல் பள்ளிபாளையத்திலேயே இறங்கி, அங்குள்ள செல்போன் கடைக்கு சென்று ரூ.25 ஆயிரத்துக்கு புதிய செல்போன் வாங்கினார். பின்னர், திருச்செங்கோடு சாலையில் இருந்த டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தினார். அதன் பின்னர், மாலை 6.30 மணியளவில் அங்கிருந்து போதையில் தள்ளாடியபடி நான்கு ரோட்டிற்கு புறப்பட்டார். அவரால் நடக்க முடியாததால், சாலையோரம் உள்ள பூக்கடை அருகே தள்ளாடி கீழே விழுந்தார். போதை மயக்கத்தில் கிடந்த அவரை, அங்கிருந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் தட்டி எழுப்பியும் அவரால் எழ முடியவில்லை.

அவர் கொண்டு வந்த சாக்கு மூட்டையை தொழிலாளர்கள் சோதனை செய்ததில் சில உடைகள், ரூ.28 ஆயிரம் ரொக்கம், புதிய செல்போன், ஒரு பழைய பட்டன் போன், அடையாள அட்டை ஆகியவை இருந்தது. இரவு நேரமாகியும், அவருக்கு போதை தெளியாததால், சாக்கு மூட்டையில் இருந்த பொருட்களை, சுமைதூக்கும் தொழிலாளர்கள், அருகில் இருந்த கடையில் கொடுத்து விட்டு, அவர் போதை தெளிந்து எழுந்ததும் கொடுக்கும்படி கூறி விட்டுச்சென்றனர். இது குறித்து காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். நேற்று காலை விடிந்ததும் போதை தெளிந்த பெயிண்டர் திடுக்கிட்டு எழுந்தார்.

தான் வைத்திருந்த பணம், செல்போன்களை காணாமல், அதிர்ச்சியடைந்த அவர் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதையடுத்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் நேற்று காலை காவல் நிலையம் வந்தனர். பெயிண்டரின் பையில் கிடந்த பணம், செல்போன் ஆகியவற்றை, போலீசார் முன்னிலையில் ஒப்படைத்தனர். காவல்துறையினரும், தொழிலாளர்களும் பெயிண்டருக்கு அறிவுரை வழங்கினர். அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.