அரியலூர், ஜூலை 16: அரியலூர் வருவாய் வட்டத்தில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நேற்று தொடங்கியது. இம்முகாமையொட்டி, கடுகூர் அரசு சமுதாய நல மையத்துக்குச் சென்ற மாவட்ட கலெக்டர் மிருணாளினி, புற நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு ஆண் மற்றும் பெண், பெண்கள் பிரிவு, காய்ச்சல் சிகிச்சை பிரிவு, தினசரி மருத்துவர் வருகை விபரம், மருத்துவ சிகிச்சை விபரம், தினசரி நோயாளிகள் வருகை விபரம், வருகை பதிவேடு, வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், மருத்துவர்கள் வருகை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் குறித்த தகவல்களை விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
மேலும் இம்மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் கட்டிட வசதி உள்ளிட்ட பிற தேவைகள் குறித்து கேட்டறியப்பட்டு அதனை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அவர் அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடை, காட்டுப்பிரிங்கியம் கிராமத்திலுள்ள கால்நடை மருத்துவமனை, பெரியநாகலூர் கிராம நிர்வாக அலுவலகங்களில் கள ஆய்வு மேற்கொண்டார்.


