கோவிந்தபுத்தூர் பகுதியில் கோயில் நிலத்தில் 1000 பனை விதைகள் நடவு: தன்னார்வலர்கள், இந்துசமய அறநிலையத்துறை ஏற்பாடு
தா.பழூர், நவ. 13: இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திலும் 1 இலட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என அறிவித்தார். அதனை செயல்படுத்தும் விதமாக அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கங்காஜடேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கோயில் நிலங்களில் இன்று சமூக ஆர்வலர்கள் மூலம் பனை விதைகளை சேகரித்து இந்து சமய அறநிலைத்துறை மற்றும் அக்னி சிறகுகள் அமைப்பு இணைந்து 7 ஏக்கரில் 1000 பனை விதைகள் நடவு செய்தனர்.
கோவிந்தபுத்தூர் கங்காஜடேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் முத்துவீரன் தலைமையில் கணினி உதவியாளர்களுடன் அக்னி சிறகு அமைப்பினர் பனை விதை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த கொள்ளிடம் ஆற்றுக் கரையோரம் உள்ள பகுதிகளில் பனை விதைகள் நடவு செய்வதன் மூலம் ஆறுகளில் தண்ணீர் அதிகம் வரும் பட்சத்தில் மண்ணரிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், நிலத்தடி நீர்நிலை மட்டங்களை உயர்த்துவதற்கு பனை மரங்கள் மிகுந்த பங்கு வகிக்கின்றன என்ற அடிப்படையில் பனை மரங்களை அதிக அளவில் நடவு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தற்போது ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
