Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமானூர் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் உருளை கருவியை பயன்படுத்த வேண்டும்: வேளாண்மை உதவி இயக்குநர் அறிவுறுத்தல்

ஜெயங்கொண்டம், ஜன.10: திருமானூர் விவசாயிகளுக்கு நேரடி நெல் விதைப்பு உருளை கருவியினை பயன்படுத்திட வேளாண்மை உதவி இயக்குநர் அழைப்புவிடுத்துள்ளார். அரியலூர் மாவட்டம், திருமானூர் விவசாயிகள் நடப்பு நவரை பருவத்தில் நேரடி நெல் விதைப்பு செய்வதன் மூலம் சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிப்பதுடன் பயிர் சாகுபடி செலவினை குறைத்து அதிக மகசூல் பெறலாம்.

மேலும் நேரடி விதைப்பு செய்வதன் மூலம் நெல் வயலில் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக இருக்கும். மாவட்ட ஆட்சியர் பரிந்துரைப்படி நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக 8 வரிசை நேரடி நெல் விதைப்பு உருளை கருவி திருமானூர் வட்டாரத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

எனவே தேவைப்படும் விவசாயிகள் திருமானூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் இக்கருவியை பெற்று பயன் பெறலாம். மேலும் இதற்கு வாடகை எதுவும் இல்லை மற்றும் பயன்படுத்திய பிறகு அலுவலகத்தில் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெறுமாறு திருமானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பரமசிவம் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.