அரியலூர், ஆக.5: அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான கலை திருவிழா போட்டிகள் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் பல கட்டங்களாக நடைபெற்றன. தமிழக அரசு மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வர வழங்கியுள்ள இத்தகைய வாய்ப்பில் 6 முதல் 8ம்வகுப்பு மற்றும் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித்தனியாக ஓவியம் வரைதல், பானை ஓவியம், செதுக்கு சிற்பம், களிமண் சிற்பம், நாட்டுப்புற நடனம், தனி நடனம் குழு, நடனம் பறை இசை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
கலைத் திருவிழாவில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டு பரிசு வழங்கினர். ஆசிரியர்கள் செந்தமிழ்ச்செல்வி, தனலட்சுமி, செந்தில்குமரன், வெங்கடேசன், அந்தோணி டேவிட், அபிராமி, ஆய்வக உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் போட்டிகளை சிறப்பாக நடத்தினர். இதில், மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
