அரியலூர், ஆக. 21: அரியலூர் நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டம் பராமரிப்பில் உள்ள மாநில நெடுஞ்சாலையான அரியலூர் - முத்துவாஞ்சேரி - புரந்தான் - காரைக்குறிச்சி சாலை காட்டுபிரிங்கியம் பகுதியை மாவட்ட கலெக்டர் மிருணாளினி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கனிம சுரங்கங்களிலிருந்து சுண்ணாம்பு போன்ற கனிம மூலப்பொருட்களை சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்களில் ஏற்றி செல்லும்பொழுது வாகனங்களின் டயர்களில் கனிம மூலப்பொருட்கள் ஒட்டிக் கொண்டு விடுகின்றன. அதோடு வாகனங்கள் வி.கைகாட்டி, அரியலூர் செல்லும் சாலைகளில் செல்லும் போது டயர்களில் ஒட்டிக்கொண்டு வரும் கனிம மூலப்பொருட்கள் சாலையில் சிதறி விழுந்து விடுகிறது. இவ்வாறு இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மூலப்பொருட்கள் சாலைகளில் நாள்தோறும் பரவிக் கிடக்கிறது.
இவ்வாறு சாலையில் சிதறி கிடக்கும் கனிம மூலப்பொருட்கள், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு தடுமாற்றத்தை தருகிறது. வெயில் நாட்களில் மூலப்பொருட்கள் காய்ந்து புழுதியாக மாறி விடுகிறது. இந்த இடத்தை வாகனங்கள் கடக்கும் போது கனிம மூலப்பொருட்களின் புழுதி எழுந்து, காற்றில் பறந்து சாலையில் பின்னால் வரும் வாகனங்களுக்கு பெரும் இடையூறாக மாறி விடுகிறது.
இது தொடர்பாக தொடர்ந்து புகார் எழுந்து வந்த நிலையில், காட்டுபிரிங்கியம் பகுதியில் உள்ள அரியலூர் - காரைக்குறிச்சி சாலையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர், கனிம சுரங்கங்கள் அமைந்துள்ள சாலைப்பகுதியில் ஒப்பந்ததாரர், ஆலை நிர்வாகம் மூலம் அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு தார்சாலை அல்லது கான்கிரீட் சாலை அமைத்து,
கனரக வாகனங்களின் டயர்களில் ஒட்டியுள்ள சுண்ணாம்பு போன்ற கனிம மூலப்பொருட்களை கழுவி அகற்றி சுத்தம்செய்து, அதன் பின்னர் நெடுஞ்சாலைகளில் செல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் தொடர்புடைய துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
அரை கிலோ மீட்டர் நீளத்திற்கு தார்சாலை அல்லது கான்கிரீட் சாலை அமைத்து, கனரக வாகனங்களின் டயர்களில் ஒட்டியுள்ள சுண்ணாம்பு போன்ற கனிம மூலப்பொருட்களை கழுவி அகற்றி சுத்தம்செய்து, அதன் பின்னர் நெடுஞ்சாலைகளில் செல்ல வேண்டும்



