Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆண்டிமடம் ஒன்றியத்தில் எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு

ஜெயங்கொண்டம் .டிச.16: ஆண்டிமடம் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத் தேர்வை 76 மையங்களில் 791 பேர் தேர்வு எழுதினார்கள். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டத்தின் மூலம் 2025- 2026 ம் கல்வியாண்டில் அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 318 மையங்களில் 4745 பேர் அடிப்படை எழுத்தறிவு தேர்வு எழுதினர். ஆண்டிமடம் ஒன்றியத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வி 76 தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி அளித்து 76 மையங்களில் 791 பேர் தேர்வு எழுதினர். வட்டார கல்வி அலுவலர் நெப்போலியன் சுதன்குமார் விளந்தை (மே), சூரக்குழி, கவரப்பாளையம் தேர்வு மையங்களை பார்வையிட்டார்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் வடுகர்பாளையம் தேர்வு மையத்தை பார்வையிட்டார். ஆசிரியர் பயிற்றுநர்கள் ரவிச்சந்திரன், சத்தியபாமா, ரமேஷ் அகிலா, உத்திராபதி ஆசைத்தம்பி ஆகியோர் தங்கள் குறுவள மைய பள்ளிகளான கூவத்தூர் குடிகாடு, விளந்தை, சின்னாத்துக்குறிச்சி, காங்குழி, இலையூர் திருகோணம், புக்குழி என பார்வையிட்டு கற்போர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கு தன்னார்வலர்கள் உதவியுடன் 200 மணி நேரம் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. அடிப்படை எழுத்தறிவு தேர்வு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் நடத்தப்பட்டது. காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை கற்போருக்கு ஏற்ப நேரம் இருக்கும் போது மையத்திற்கு சென்று 3 மணி நேரம் தேர்வு எழுதலாம் என்ற நோக்கத்துடன் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. வயதான கற்போர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை பெற்று வட்டார வள மையத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.