அண்ணாமலையார் கோயிலில் வருஷாபிஷேகம் மாட வீதியில் சுவாமி உலா
திருவண்ணாமலை, பிப்.8: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், 8ம் ஆண்டு வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. அதையொட்டி, அலங்கார ரூபத்தில் சுவாமி மாட வீதியில் வலம் வந்து அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த 6.2.2017 என்று மகா கும்பாபிஷேம் நடந்தது. அதைத்தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடந்த திதி நட்சத்திரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று முன்தினம் மாலை வருஷாபிஷேகத்தின் முதல் கால பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடந்தது. மேலும், சுவாமிக்கும், அம்மனுக்கும் மகா அபிஷேகம் நடந்தது. பின்னர், நேற்று மாலை 7.30 மணியளவில் விநாயகர், சந்திரசேகர் அலங்கார ரூபத்தில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.