Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லை டவுன் புட்டாரத்தி அம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் அம்மன் வீதியுலா

நெல்லை, மே 26: நெல்லை டவுன் புட்டாரத்தி அம்மன் கோயில் வைகாசி திருவிழாவின் 9ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இதை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். நெல்லை டவுன் புட்டாரத்தி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான வைகாசி விசாகத் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது.

இரவு பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளலைத் தொடர்ந்து வீதியுலா நடந்து வருகிறது. 7ம் திருநாளையொட்டி கடந்த 23ம் தேதி மாலை அம்பாளுக்கு சிவப்பு சாத்தி வீதியுலா நடந்தது.இதில் சப்பரத்தின் பின்புறத்தில் நடராஜர் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். இரவு வெள்ளை சாத்தி வீதியுலா நடந்தது. 8ம் திருநாளான நேற்று முன்தினம் 24ம் தேதி காலை வெள்ளை சாத்தி, மாலை குதிரை வாகனத்திலும் அம்மன் எழுந்தருளும் வைபவமும் நடந்தது. இந்நிலையில் 9ம் நாளான நேற்று (25ம்தேதி) காலை உற்சவர் ரத உற்சவம் நடந்தது.

இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த அம்பாளை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். மாலை சயனகோலத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். 10ம் திருநாளான இன்று (26ம் தேதி) நண்பகல் நெல்லைப்பர் கோயில் பொற்றாமரை குளத்தில் புட்டாரத்தி அம்மன் தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.