*நில அளவீடு செய்யாமல் அலைக்கழிப்பதாக புகார்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட சிகரம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கொட்டியாம்பூண்டி கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இதனை அளவீடு செய்ய தாசில்தாரிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் கடந்த 16ம் தேதி கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர் அளவீடு செய்ய வந்தனர்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் மக்களை திரட்டி வந்து அளவீடு செய்ய விடாமல் தடை செய்துள்ளாார். இதுகுறித்து டிஎஸ்பி, தாசில்தார், பிடிஓ அலுவலகத்தில் மீண்டும் மனு அளித்தோம். அதன்படி 28ம் தேதி பட்டா இடத்தை அளவீடு செய்ய போலீஸ் பாதுகாப்புடன் வந்தபோது ரேஷன் கடையை அகற்ற வந்துள்ளதாக பொய் தகவலை பரப்பி அன்றும் நெருக்கடி கொடுத்தனர்.
தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அது வசிப்பதற்கு ஏற்ற இடமாக இல்லாததால் கைவிடப்பட்டது. தொடர்ந்து பொன்னங்குப்பம் கிராமத்தில் மாற்றுத்திறனாளி வீட்டுக்கு செல்லும் பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சிறுவாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டு மனைப்பட்டாவுக்கு நேரடி ஆய்வு செய்யாமல் இருக்கின்றனர். அதேபோல் கலைஞர் கனவு இல்லத்தில் தகுதியிருந்தும் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.