திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை சேர்ந்தவர் வீரபாகு என்ற குட்டி (35). இவர், கடந்த மாதம் டூவீலர் திருடியது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு, திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இருக்கும் அறையில் 11 பேர் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீரபாகுவிற்கும், மதுரையை சேர்ந்த கைதி ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது மதுரை கைதி சாப்பாட்டு தட்டால் வீரபாகுவின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், அவரது மண்டை உடைந்தது. உடனே சிறை காவலர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், வீரபாகுவை தவிர, மற்ற 10 கைதிகளையும் மதுரை சிறைக்கு மாற்றினர்.