புதுடெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு டிஜிட்டல் பணிப்பதிவேடு புத்தகங்களை பராமரிக்கும்படி பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு புத்தகம் என்பது சம்பந்தப்பட்ட ஊழியரின் முழு சேவை காலம் மற்றும் பணி வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்வதற்கான ஒரு ஆவணமாகும். இது பணியின் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆட்சேர்ப்பு நிலை முதல் ஓய்வு வரையிலான ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையையும் பதிவு செய்கின்றது.
அரசு விதிகளின்படி ஒரு அரசு ஊழியருக்கு ஒரு பணிப்பதிவேடு புத்தகம் பராமரிக்கப்பட வேண்டும். அது அவர் பணியாற்றும் அலுவலகத் தலைவரின் பாதுகாப்பில் வைக்கப்பட வேண்டும். ஊழியர் இடமாற்றத்தின்போது சேவை புத்தகமும் சேர்ந்து மாற்றப்பட வேண்டும். இந்நிலையில் ஊழியர்களுக்கு டிஜிட்டல் பணிப்பதிவேடு புத்தகங்களை பராமரிக்கும்படியும், காகித முறையில் பராமரிக்கப்படும் பணிப்பதிவேடு புத்தகத்தை படிப்படியாக அகற்றும்படியும் பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.