Thursday, December 7, 2023
Home » ஜீரண மண்டலம் பிரச்னைகளும் தீர்வும்!

ஜீரண மண்டலம் பிரச்னைகளும் தீர்வும்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

ஜீரண மண்டலம் என்பது மாபெரும் உறுப்புகளின் சங்கமம். சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், கல்லீரல், கணையம், சிறுநீரகங்கள் எனப் பல உறுப்புகளோடு தொடர்புடைய மிகப் பெரிய உடலியற் செயல்பாட்டையே நாம் ஜீரண மண்டலம் என்கிறோம். இதில் வரச் சாத்தியமான சில முக்கியமான பிரச்னைகளை இங்கு பார்க்கலாம்.

ஏப்பம், வயிறு உப்புசம்

அதிக காற்றை விழுங்குதல், சாதாரணமாக விழுங்கும் காற்றை உடல் சரிவர வெளியேற்றாமல் இருப்பது, இரைப்பையில் ஜீரணமாகாத உணவு பெருங்குடலுக்குச் செல்லும்போது வாயு உற்பத்தியாவது, உடலில் இயற்கையாகவே சாதாரண அளவுக்கு உற்பத்தியாகும் வாயுவைக்கூட சிலரால் பொறுக்க முடியாது போவது போன்ற பல காரணங்களால் இவை ஏற்படும். சிலர் எந்தவிதக் காரணமும் இன்றி தாங்களாகவே ஏப்பம் விடுவதை ஒரு பழக்கமாகவே ஆக்கிக்கொள்ளுவர். வேறு சிலர் ஆரம்பத்தில் வயிற்றில் ஏற்படும் அசௌகரியத்தைச் சரி செய்ய ஏப்பம்விட ஆரம்பித்து நாளடைவில் அதையே பழக்கமாக ஆக்கிக்கொள்வதுண்டு.

சாப்பிடும்போது பேசுவது, அவசரமாகச் சாப்பிடுவது அல்லது திரவங்களைப் பருகுவது, ஸ்ட்ரா மூலம் உறிஞ்சிக் குடிப்பது, அடிக்கடி சூயிங்கம் மெல்வது, மிட்டாய்
சப்புவது போன்றவை அதிக காற்றை விழுங்கச் செய்யும். பதற்றமாக இருக்கும்போது சிலர் அதிக காற்றை விழுங்குவர். சிலருடைய உடம்பு, நார்ச்சத்துள்ள மற்றும் குறிப்பிட்ட விதமான சர்க்கரை கொண்டுள்ள உணவு மற்றும் பருப்பு வகைகளை ஜீரணமாக்கும்போது, சாதாரணத்தைவிட அதிக வாயுவை உற்பத்தி செய்கிறது. உதாரணமாக, முள்ளங்கி, முட்டைக்கோஸ், ராஜ்மா, கிழங்கு வகைகள், பூண்டு. இந்தத் தொல்லை தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் காண்பிக்கவும்.

அஜீரணம்

சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல்பகுதியிலோ, நெஞ்சின் கீழ்ப் பகுதியிலோ, அசௌகரியமான அல்லது வலி போன்ற உணர்வு ஏற்படும். இதனுடன் நெஞ்சு எரிச்சல், எதுக்களித்தல், குமட்டல், வாந்தி அல்லது உப்புசம் ஏற்படலாம். என்ன சாப்பிடும்போது இந்த அறிகுறிகள் ஏற்படுகிறது எனக் கவனித்துத் தவிர்க்கவும். தொடர்ந்து இருந்தால்
மருத்துவரிடம் காண்பிக்கவும்.

குமட்டல், வாந்தி

இவை அசௌகரியத்தை ஏற்படுத்தி நம் அன்றாட வாழ்க்கையையே பாதிக்கும்.ஜீரண மண்டலத்தையும் அதனைச் சுற்றியுள்ள உறுப்புகளிலும் மற்றும் உடலின் சில பாகங்களில் ஏற்படும் தொற்றினாலும், எரிவாலும், ஒற்றைத் தலைவலியாலும் எனப் பல காரணங்கள் உண்டு. சிலருக்கு பிரயாணங்களின்போது ஏற்படும். இதைத் தடுக்க மருந்துகள் உள்ளன.

வாந்தியால் உடம்பில் தாதுஉப்பு, நீர் குறையும். உடனடியாக அதைச் சரிசெய்ய வேண்டும். இதைத் தவிர, தொடர்ந்து குமட்டல், வாந்தி இருந்தால் அடிப்படைக் காரணத்தைக் கண்டுபிடித்துச் சரிசெய்ய வேண்டும்.

வயிற்று வலி

ஜீரண மண்டலத்திலோ, வயிற்றின் இதர உறுப்புகளிலோ வயிற்றின் சுவரிலோ தொற்று, எரிவு, அடைப்பு, புற்றுநோய், அடிபடுதல் என ஏற்பட்டால் வயிற்றுவலி ஏற்படும்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

*சில மணி நேரங்களுக்கு தொடர்ந்து அதிக வலி

*திடீரென அதிக வலி

*வலியினால் வேலை பாதிக்கப்படுதல்

*வலியுடன் குமட்டல், வாந்தி, வாந்தியில் ரத்தம்

*வலியுடன் பேதி அல்லது மலச்சிக்கல், மலத்தில் நிற மாற்றம். முக்கியமாக கருப்பு அல்லது காப்பி நிறத்தில் போதல்.

*இரவில் தூங்கும்போது வலியினால் விழித்தல்.

*தொடர்ந்து சில நாட்களுக்கு லேசான/மிதமான வலி.

நெஞ்சு/வயிறு எரிச்சல்

எப்பொழுதாவது காரமான உணவு சாப்பிட்ட பிறகு நம் எல்லோருக்கும் இது ஏற்பட்டிருக்கும். இதுவே அடிக்கடி ஏற்படுமானால் வயிறு உணவுக் குழாய் பின்னோட்ட நோயின் (Gastro Desophageal Reflux Disease) அறிகுறியாக இருக்கலாம்.

நாம் உண்ணும் உணவு எப்போதும் ஒரு வழிப் பாதையாக உணவுக் குழாயில் இருந்து இரைப்பைக்குச் செல்லும். அவ்வாறு இல்லாமல், சில சமயங்களில் இரைப்பையில் உள்ள உணவு அமிலத்துடன் உணவுக் குழாய்க்குத் திரும்பும்போது, உணவுக்குழாயைப் பாதிக்கிறது.இதனால் நெஞ்சுக் குழியில் இருந்து நெஞ்சு மற்றும் தொண்டை வரை எரிச்சல், எதுக்களித்தல், விழுங்குவதில் சிரமம் போன்றவை ஏற்படும். கவனிக்காவிட்டால், பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

கீழ்க்கண்ட வாழ்க்கைமுறை மாற்றங்கள் பெரிதும் உதவும்

சாப்பிட்ட பிறகு 2-3 மணி நேரம் கழித்து உறங்கச் செல்லவும். தலையை உயர்த்திப் படுப்பது உதவும்.சாக்லேட், தக்காளி மற்றும் புளிப்புப் பழங்கள், எண்ணெய், கொழுப்புச் சத்துள்ள உணவுகள் நெஞ்சு எரிச்சலை அதிகப்படுத்தும்.புகை, மதுப்பழக்கத்தைத் தவிர்க்கவும். புகைப்பொருட்கள் உமிழ்நீர் சுரப்பதைத் தடுப்பதுடன், இரைப்பையில் அதிக அமிலம்
சுரக்கச்செய்து, உணவுக் குழாய்க்கும், வயிற்றுக்குமான தசையைத் தளர்வடையச் செய்கின்றன.

அதிக எடை இருந்தால், எடை குறைத்தல் நல்லது. வாரத்துக்கு இரண்டு தடவைக்கு மேல் நெஞ்சு எரிச்சல் இருந்தாலோ, உணவு நெஞ்சில் அடைத்தால் போல் உணர்ந்தாலோ எதுக்களிப்பது, அடிக்கடி காற்றுக் குழாய்க்குச் சென்று இருமல், தொண்டை கரகரப்பு, மூச்சுத் திணறல் ஏற்படுத்துவது போன்றவை இருந்தால் மருத்துவரிடம் செல்லவும்.

பெப்டிக் அல்சர் (peptic ulcer)

புண் இரைப்பையிலும், குடலின் ஆரம்பப் பகுதியான ட்யோடினத்திலும் (Duodenum) ஏற்படும்போது ‘அல்சர்’ எனப்படுகிறது. இது ஏற்பட இரண்டு பொதுவான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஹெலிக்கோ பாக்டர் பைலோரை மற்றும் அதிக/தேவையில்லாமல் உட்கொள்ளும் வலி மாத்திரைகள்.

முன்பு முக்கியக் காரணி

களாக பரவலாக நம்பப்பட்ட உணவுகள் மற்றும் மன அழுத்தத்தை சமீப ஆய்வுகள் நிராகரிக்கின்றன. இவை ஏற்கெனவே உள்ள புண்ணை வேண்டுமானால் அதிகப்படுத்தும் என்று கூறுகின்றன. புகைபிடித்தல் அல்சர் ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கிறது.வலி மாத்திரைகளை அதிக அளவில் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உட்கொள்ளாமல் இருப்பதும், பரிந்துரைக்கப்பட்ட வலி மருந்துகளை ஆலோசனையின்படி சரிவர உட்கொள்ளாமல் இருப்பதும், இரைப்பையில் சுரக்கப்படும் அமிலத்தில் இருந்து இரைப்பை மற்றும் டுயோடினத்தைக் காக்கமுடியாமல் செய்து எரிவை ஏற்படுத்தி அல்சர் புண்ணாக்குகிறது.

அறிகுறி இல்லாமலும் இருக்கலாம். வயிற்றில் வலி ஏற்படுத்தலாம் அல்லது ரத்தக் கசிவை ஏற்படுத்தலாம். தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று பரிசோதித்தல் அவசியம். ஹெலிக்கோ பாக்டர் பைலோரை பாக்டீரியாவால் ஏற்பட்டிருக்கும் என்று கண்டுபிடித்தால் 3-4 வகையான மருந்துகள் கொடுக்கப்படும். இந்த பாக்டீரியாவை முழுவதுமாக அழிக்கத் தொடர்ந்து சில நாட்களுக்கு மருந்து எடுக்க வேண்டியிருக்கும். அதனால் பரிந்துரைக்கப்பட்ட கால அவகாசத்துக்கு மருந்துகளை உட்கொள்வதன் மூலம் மட்டுமே நோயில் இருந்து நிரந்தர நிவாரணம் பெறமுடியும். இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்ட அனைவருக்குமே ‘அல்சர்’ ஏற்படுவதில்லை. ஏன் சிலருக்கு மட்டுமே ஏற்படுகிறது என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

யோகா எவ்வாறு உதவுகிறது?

யோகப் பயிற்சிகள் ஜீரண மண்டலத்தின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தைச் சீர் செய்கிறது.அதன் பலவிதச் சுரப்புகளையும் சீராக்குகிறது.தானியங்கி நரம்பு மண்டலம் ஜீரண மண்டலத்தின் சீரான இயக்கத்துக்குப் பெரிதும் உதவுகிறது. இது சமன் நிலையில் இல்லாதபோது வியாதிகள் ஏற்படும்.யோகப்பயிற்சிகள் நரம்புமண்டலத்தைச் சமன் செய்ய பெரிதும் உதவுகிறது.

தொகுப்பு: லயா

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?