தர்மபுரி: தர்மபுரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இளைஞரணி செயலாளராக விஜயபிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை கே.வி.மகாலில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டார்.
மாநில அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்சங்கர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுரேஷ் வரவேற்றார். இதில் விஜயபிரபாகரன், மாநில பொருளாளர் சுதீஷ், முன்னாள் எம்எல்ஏக்கள் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ், செந்தில்குமார், சுபா ரவி, துணை செயலாளர்கள் பன்னீர்செல்வம், சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பொதுச்செயலாளர் பிரேமலதா, ஜோதி பயணத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நடந்த தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் மாநில அளவிலான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மீண்டும் கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். அவைத்தலைவராக டாக்டர் இளங்ேகாவன், பொருளாளராக சுதீஷ், தலைமை நிலைய செயலாளராக பார்த்தசாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கொள்கை பரப்பு செயலாளராக முன்னாள் எம்எல்ஏ அழகாபுரம் மோகன்ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துணைச் செயலாளர்களாக பன்னீர்செல்வம், சந்திரன் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் செந்தில்குமார், சுபாரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார். புதிய நிர்வாகிகளுக்கு பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.