Tuesday, June 24, 2025
Home செய்திகள் தர்மபுரி மாவட்டத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை சிறப்பு முகாம்

தர்மபுரி மாவட்டத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை சிறப்பு முகாம்

by Lakshmipathi

*7 வட்டாரங்களில் நடந்தது

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை திட்ட சிறப்பு முகாம்கள், 7 வட்டாரங்களில் நேற்று நடந்தது.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வேளாண்மை விரிவாக்க சேவைகளை, உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில், உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை’ திட்டத்தை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, நேற்று காணொளி காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாரம், மாணிக்கமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடிலம் ஊராட்சியில் காணொளி காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சதீஷ், ஆ.மணி எம்பி., ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் சார்பு துறை சார்பில், விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகள், பயிர் சார்ந்த தொழில்நுட்பங்கள், திட்டங்களை எடுத்துக்கூறி பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் மற்றும் எம்பி ஆகியோர் பார்வையிட்டனர்.

வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 5 பயனாளிகளுக்கு துவரை செயல்விளக்கத்திற்கான அரசு மானியங்கள் வழங்கப்பட்டன. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு உளுந்து மினிகிட்கள் என மொத்தம் 10 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்பி ஆகியோர் வழங்கினர். இத்திட்டத்திற்கான முகாம்கள், 15 நாட்களுக்கு ஒருமுறை (2 மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில்) ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள 2 கிராமங்களில் நடத்தப்படும்.

விவசாயிகளின் தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன், அரசு நலத்திட்ட உதவிகள், அவர்களை விரைவாக சென்றடையும். இத்திட்டத்தின் கீழ், ஒரு வருடத்திற்குள் தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள விவசாயிகளை சந்தித்து, அந்தந்த கிராமங்களில் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளை ஒருங்கிணைத்து முகாம்கள் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு வட்டாரத்திலும், வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும் ஆக மொத்தம் இரு குழுக்கள் அமைக்கபபட்டுள்ளது. இக்குழுவில் வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர், கால்நடைத்துறை மருத்துவர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், மீன்வளத்துறை ஆய்வாளர்கள், வேளாண்மை விஞ்ஞானிகள் ஆகியோர்கள் இடம் பெறுகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் ‘உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை’ முகாம்கள் தர்மபுரி வட்டாரத்தில் கிருஷ்ணாபுரம், அக்கமனஅள்ளி கிராமத்திலும், நல்லம்பள்ளி வட்டாரத்தில் லளிகம், மிட்டாதின்னஅள்ளி, பாலக்கோடு வட்டாரத்தில் பாலக்கோடு, கெண்டேனஅள்ளி, காரிமங்கலம் வட்டாரத்தில் அடிலம், திண்டல், பென்னாகரம் வட்டாரத்தில் சிகரலஅள்ளி, செங்கானூர், மொரப்பூர் வட்டாரத்தில் கெலவள்ளி, பசுவாபுரம், அரூர் வட்டாரத்தில் கொளகம்பட்டி, அச்சல்வாடி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் மோளையானூர், அ.புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வேளாண் இணை இயக்குநர் குணசேகரன், தோட்டக்கலை துணை இயக்குநர் பாத்திமா, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) இளங்கோவன், அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi