Friday, June 13, 2025
Home செய்திகள் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அண்ணாமலையார் கோயிலில் ₹500 கட்டணத்தில் பிரேக் தரிசனம்: தினமும் மாலை ஒரு மணி நேரம் அனுமதிக்க முடிவு; மக்களிடம் கருத்துக்கேட்பு

பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அண்ணாமலையார் கோயிலில் ₹500 கட்டணத்தில் பிரேக் தரிசனம்: தினமும் மாலை ஒரு மணி நேரம் அனுமதிக்க முடிவு; மக்களிடம் கருத்துக்கேட்பு

by Karthik Yash

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் தினமும் ஒரு மணி நேரம் ‘பிரேக் தரிசனம்’ அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பிரசித்தி பெற்ற சைவ திருத்தலமாகும். பஞ்ச பூத தலங்களில் அக்னித் தலமாக திகழும் இத்திருக்கோயிலை தரிசனம் செய்யவும், கிரிவலம் சென்று வழிபடவும் சமீப காலமாக பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். எனவே, பவுர்ணமி நாட்களைப் போல, அனைத்து நாட்களும் திருவண்ணாமலை பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்திருக்கிறது.

வார நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அதிகபட்சம் 2 மணி நேரமும், வார இறுதி நாட்களில் 4 மணி நேரம் முதல் 5 மணி நேரமும், பவுர்ணமி நாட்களில் அதிகபட்சம் சுமார் 6 மணி நேரமும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதோடு, வரிசையில் காத்திருக்கும் போது ஏற்படும் வாக்குவாதம், கைகலப்பு சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. எனவே, தரிசன வரிசையை முறைப்படுத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தினமும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் இடைநிறுத்த தரிசனம் (பிரேக் தரிசனம்) அனுமதிக்கவும், அதற்காக, ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கவும் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மேலும், ஆனி பிரமோற்வசம் 10 நாட்கள், ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள், தீபத்திருவிழா 17 நாட்கள், உத்ராயண புண்ணியகால உற்சவம் 13 நாட்கள், பங்குனி உத்திரம் 5 நாட்கள் ஆகிய நாட்களிலும், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியில் 2 நாட்கள் வீதம் மொத்தம் 24 நாட்கள் மற்றும் பிரதோஷம் நடைபெறும் 24 நாட்கள் உள்பட ஆண்டுக்கு மொத்தம் 103 நாட்கள் மட்டும் பிரேக் தரிசனம் இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பொதுமக்கள் வரும் 30ம் தேதி வரை எழுத்து மூலம் கருத்து தெரிவிக்க கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. எனவே, பொதுமக்களின் கருத்து அடிப்படையில், பிரேக் தரிசனம் அமல்படுத்தப்படுமா? இல்லையா? என்பது தெரியவரும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi