மதுரை: வாடகை வாகனங்களில் செல்வதற்கு தடை விதித்த அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வழக்கறிஞர் சங்கிலி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா அக். 30ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சொந்த வாகனம் இல்லாதவர்கள், பசும்பொன் கிராமத்திற்கு வந்து மரியாதை செலுத்த வாடகை வாகனங்கள் மூலம் வருவதற்கு காவல்துறையிடம் மனு அளித்தோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.
தேவர் குருபூஜை நிகழ்வுகளில் கலந்துகொள்ள வாடகை வாகனங்கள் மூலம் செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் திலக் குமார் மற்றும் ரவி ஆஜராகி, ‘‘2017ல் வாடகை வாகனத்தில் செல்ல ஐகோர்ட் தடை உத்தரவு உள்ளது. அதனை பின்பற்றி தற்போது வாடகை வாகன அனுமதி கொடுப்பதில்லை. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு உள்ளது. இதனால் அனுமதிக்க முடியாது. ஆனால் மக்கள் தடையின்றி செல்ல 5 மாவட்டங்களில் இருந்தும் 500 பஸ்கள் இயக்கப்படுகின்றன’’ என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 144 தடை உத்தரவு உள்ளது. அதனால் வாடகை வாகனங்களை அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் அரசு தரப்பில் பக்கத்து மாவட்டத்தில் இருந்து மக்கள் தடையின்றி வர 500 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் புதுகோட்டை, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் மக்கள் செல்ல கூடுதல் பஸ்கள் இயக்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும். வாடகை வாகனத்தில் செல்ல தடை விதித்த அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது. இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.